ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?
நாடாண்ட தமிழ் ஜாதியினரையெல்லாம் அடிமைப்படுத்தி, அவர்களிடையே ஜாதிச் சரக்குகளை மூட்டிவிட்டுத் தீண்டாமை, காணாமை என்னும் கொடிய வழக்கங்களைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள் அல்லர். வந்தேறிகளாய் ஆள வந்த கன்னட, தெலுங்கு வடுகர்களே! தமிழர்கள் ஜாதியில் கெட்டு வீழவும், தாழ்வு மனப்பான்மையில் தாழவும், உதிரி மயமாகவும் அவர்களே காரணமானவர்கள். ஆரியத்தின் புதிய அடியாளாய் ஆர்ப்பறித்து நிற்கும் குணாவின் குற்றச்சாட்டே இது. இதைப் பைத்தியக்காரத்தனம் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? மோசடித்தனம் என்பதா? பித்தலாட்டம் என்பதா? அல்லது ஒட்டுமொத்தமாய் அனைத்தும் என்பதா? இப்படி ஓர் உளறல், சதிவேலை வேறு என்ன இருக்க முடியும்? நான் முன்னமே குறிப்பிட்டதுபோல, இவர் நூல் எழுத வந்த நோக்கமே தமிழர்கள் வீழ்ந்தது எதனால் என்பதை ஆராய அன்று. ஆரியத்தின் பழியைத் துடைத்து, அவர்களுக்கு ஆதரவாய் நின்று, அவர்களின் முதன்மை எதிர்ப்பாளர்களான திராவிடக் கட்சியினரைக் களங்கப்படுத்தி, தமிழர்கள் அவர்களை வெறுக்கும் படிச் செய்து, மாறாக தமிழர்கள் ஆரியத்தை ஏற்கும்படி செய்யும் ஒரு வஞ்சகத் திட்டத்துடனே என்பது இந்தக் குற்றச்சாட்டின் வழி மிகத் தெளிவாக தெரிகிற...