தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9





படித்துவிட்டு வேலை இன்றித் தவிக்கும் நம் இன மாணவ மாணவியர்! மண்டல் கமிஷன் கடும் உழைப்பில் சேகரித்த புள்ளி விவரங்கள் (2)



 
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குஜராத் மாநிலத்தில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து பெருங் கலவரத்தில் ஈடுபட்டனர்; தாழ்த்தப்பட்ட தோழர்கள் அங்குக் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியும் உண்டு. அதனை ஆதரித்துத் தமிழ்நாட்டிலும் பேரணி ஒன்றை நடத்த முன் வந்தனர் - உரிமை பறிக்கப்பட்ட முற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில்! அதற்கான தேதி - 22.3.1981 என்று அறிவிக்கவும் பட்டது.

அதற்கு முதல் நாள் சென்னை தியாகராயர் நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் முழக்கமிட்டார் - எச்சரித்தார். முற்படுத்தப்பட்ட ஆதிக்கவாசிகள் பேரணி கிளம்பும் அதே இடத்திலிருந்து எதிர்ப் பேரணி கிளம்பி அதே பாட்டையில் செல்லும் என்று போராட்ட அறிவிப்பைக் கொடுத்தார். தடை விதித்தால் மீறப்படும் என்று போர்ச் சங்கு ஊதினார். விளைவு - அவர்களின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வகுப்புரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் என்று பார்ப்பனர்கள் அறிவித்தனர் (15.7.1981). அதனை எதிர்த்து உண்ணும்விரதம் என்று கழகம் அறிவித்தது... விளைவு அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது. அதேபோல தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை  எதிர்த்து சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன் (3.7.1985) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பார்ப்பனர்கள் அரங்கேற்றத் திட்டமிட்டனர். அதே நாளில் அதனை எதிர்த்து உண்ணும்விரதம் போராட்டம் என்று அறிவித்தார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்.
 
அவ்வளவுதான் அரசு அவர்கள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது - நமக்கும் போராட்டத்துக்கு வேலையில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் சங்கங்களின் இணைப்புக் குழு சார்பில், அண்ணா சாலை அஞ்சலகம் முன் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை ஒழிக்க அனுமதிக்க மாட்டோம்! என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1980ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைக்கப் பெற வேண்டுமானால் அவர்கள் கல்லூரிக்கு 90 விழுக்காடு அளவில் வருகை தந்திருக்க வேண்டும் என்பதுதான் அவ்வாணை.
பல்வேறு இடர்ப்பாடுகளிடையே படித்து வரும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு இது சாத்தியமானதல்ல என்பதால் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆளுநரைச் சந்தித்து (26.3.1980) விளக்கி கூறினார். அதன் காரணமாக அந்த ஆணையை ரத்துச் செய்தார் ஆளுநர்.
திருச்சி மாவட்டம் தளவாய்ப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை அலுவலர் ஒருவரை பதவி ஏற்கவிடாமல் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தந்தி கொடுத்தார் பொதுச் செயலாளர். மாவட்ட ஆட்சித் தலைவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளருடன் தொடர்பு கொண்டார். ஜாதி வெறியர்களின் கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூக அதிகாரி பதவியில் தொடரும் நிலை உறுதிப்படுத்தப்பட்டது.

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து போடப்படும் வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து தாழ்த்தப்பட்டோர் போராட முனைந்தனர். திருவனந்தபுரத்திலிருந்து 101 தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நடைபயணம் தொடங்கி 13.2.1983 அன்று குருவாயூரப்பன் கோயில் விருந்தில் நுழைய திட்டமிட்டனர்.
இந்தப் போராட்ட வீரர்களை திராவிடர் கழகம் வரவேற்கும் பாராட்டும் என்று அறிவித்து, திராவிடர் கழக இளைஞரணிப் பொறுப்பாளர்களையும் - தோழர்களையும்  பொதுச் செயலாளர் அனுப்பி வைத்தார். எர்ணாகுளத்திலிருந்து 17 கல் தொலைவில் உள்ள செரை என்ற ஊரில் போராட்ட வீரர்களை திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் வரவேற்று மாலை அணிவித்து கழகத்தின் ஆதரவைத் தெரிவித்தனர் (9.2.1983). கொஞ்ச தூரம் வரை அவர்களின் நடை பயணத்திலும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கேரளப் போராட்டக் குழுத் தலைவர் கல்லார - சுகுமாறன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு முறை எங்கள் அழைப்பை ஏற்று கேரளா வருமாறும் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் இயங்கும் தென் மண்டல உணவுக் கார்ப்பரேசனில் நான்காம் பிரிவு ஊழியரிலிருந்து மூன்றாம் பிரிவுக்குப் பதவி உயர்வு கொடுத்தபோது தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்களுக்கு விகிதாசாரத்தைக் கடைபிடிக்க உயர்ஜாதி அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதனை எதிர்த்துப் போராடிய 43 தாழ்த்தப்பட்ட சமூக அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்துக் குரல் எழுப்பியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்; கண்டித்து எழுதியதும் விடுதலையே! நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமூகக் கொடுமையிலிருந்து விடுதலை பெற இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்கள். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்தப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி அச்சுறுத்தினார்கள். அந்த நேரத்தில் கழகப் பொதுச் செயலாளர் மீனாட்சிபுரத்திற்கே சென்று (25.7.1981) அவர்களுடனேயே இரண்டு மணி நேரம் தங்கி அளவளாவி அவர்களிடையே உள ரீதியாய் உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார்.

திருச்சி கரூரையடுத்த தோட்டக் குறிச்சி கிராமத்தில் பள்ளர் சமுதாயத்தவர்க்கும், கவுண்டர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அக்கிராமத்திற்குச் சென்று (14.5.1985) பாதிக்கப்பட்ட பள்ளர் சமுதாய மக்களுக்கு ஆறுதல் கூறினார். அக்கிராமத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரம் குறித்து கழகக் குழுவினர்கள் ஆய்வு செய்த அறிக்கை விடுதலையில் விரிவாக வெளியிடப்பட்டது (16, 17.5.1985).

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இட ஒதுக்கீடு முறையை ஆணையாகப் போட்டது நீதிக்கட்சி ஆட்சிதான். அமைச்சர் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் முயற்சியால் அந்த ஆணை வந்தது. மொத்த இடங்கள் 12 என்றால் தாழ்த்தப்பட்டோருக்கு 1, பார்ப்பனர் அல்லாதாருக்கு 5, பார்ப்பனருக்கு 2, முஸ்லீம்களுக்கு 2, கிறித்தவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு 2 என்று உத்தியோகங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. (3.9.1928)
 
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு 18 என்று இருப்பதை மேலும் உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருவதும் திராவிடர் கழகமே!

மக்கள் தொகையில் 22 முதல் 25 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு, அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி ஒடுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு அதிக ஒதுக்கீடு தருவது மிக மிக அவசரமும், அவசியமானதுமாகும்.
- கி.வீரமணி அறிக்கை (விடுதலை, 2.3.1981)

29.3.1981 அன்று கும்பகோணத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற வகுப்புரிமை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான - அரசின் 18 சதவிகித இடஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றம் தோன்றி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டும் கூட ஒரு தாழ்த்தப்பட்டவர் இதில் நீதிபதியாக வர முடியவில்லையே - ஏன் என்ற கேள்வியை தந்தை பெரியார் அவர்கள் எழுப்பிய பின்னர்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் திரு..வரதராசன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் நீதிபதி மட்டுமல்ல; உச்சநீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி என்கிற வரலாற்றுச் சான்றாளராகவும் அவர் ஆனார்.
 
இந்தியாவின் குடியரசுத் தலைவராக, துணைக் குடியரசு தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவரே வர வேண்டும் என்பதில் திராவிடர் கழகம் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடறியும் (பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு மாநாடு - குடவாசல் 6.2.1982). ஜஸ்டிஸ் திரு..வரதராசன் அவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராகக் கொண்டு வர திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எடுத்துக் கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல!

அடுக்கிக் கொண்டே போகலாம். எவ்வளவு எடுத்துக் காட்டுகளையும் கொடுக்கலாம்; அப்பொழுதும் முற்றுப் பெறாது. யாரையும் திருப்திப்படுத்த அல்ல - இந்த பணிகளைக் கழகம் மேற்கொள்வதற்குக் காரணம், அது ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காகத்தான் அது உழைத்துக் கொண்டிருக்கிறது. நமக்குள்ள வருத்தம் எல்லாம் நம் சகோதரர்களுக்கு யார் எதிரி? யார் நண்பன்? என்பதில் கூடத் தடுமாற்றம் இருக்கிறதே என்பதுதான்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் என்றால் மாலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறது கழகம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பினர், தந்தை பெரியார் பிறந்த நாளை நினைவு கூர்கிறார்களா? குறைந்த பட்சம் ஒரு மாலையை அணிவிக்கிறார்களா? ஏன் இந்த நிலைப்பாடு?
 
அண்ணல் அம்பேத்கரும் - தந்தை பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அல்லவா? அவர்களின் கொள்கைகள் என்ன? - கோட்பாடுகள் என்ன? நட்பு என்ன? - இணக்கம் என்ன? இவற்றைப் பற்றி எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இவற்றைப்பற்றி எல்லாம் ஆழமாக மேலும் எழுதுவோம்!

குறிப்பு: விருதுநகர் தோழர் எழுதிய கடிதத்திற்கு - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்கிற முறையில் நாம் பதில் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் அவர் கடிதத்திற்கான பதில் தாராளமாகவே தரப்பட்டுள்ளது. யார் நம்மை வெறுத்தாலும் தூற்றினாலும் நம் இயக்கக் கொள்கை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தோள் தூக்கிப் போராடுவதே!

1940களில் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் சந்திக்க ஆரம்பித்தார்கள்; கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
8.1.1940 அன்று பம்பாயில் ஜின்னா இல்லத்தில் அம்பேத்கருடன் தந்தை பெரியார் உரையாடினார் மூன்று மணி நேரம். நாட்டுப் பிரிவினை, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் போக்குப்பற்றி எல்லாம் விவாதிக்கப்பட்டது. வட நாட்டில் பிரச்சாரம் செய்ய அண்ணல் அய்யாவை அழைத்தார்; அய்யாவும் ஒப்புக் கொண்டார்; அய்யா அண்ணலை தமிழ்நாட்டுக்கு அழைத்தார் அண்ணலும் இசைவு தந்தார்.

1944-இல் அண்ணல் அம்பேத்கர் சென்னை வந்தார். தந்தை பெரியாரை அவரது இல்லத்தில் வந்து சந்தித்தார். ஒரு மணி நேரம் நடந்தது உரையாடல். சேலம் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு அண்ணல் தம் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டார்.

சேலம் மாநாட்டுக்குப் பின் தந்தை பெரியாருடன் கருத்து மாறுபாடு கொண்டிருந்த ஒரு குழுவினர் அம்பேத்கர் அவர்களை அழைத்து விருந்து நடத்தினார்கள்; பெரியாரைப்பற்றிக் குறைகளையும் கூறினார்கள். அண்ணல் என்ன சொன்னார் தெரியுமா? பெரியாரைக் குறை கூறாதீர்கள். அவர் சொல் கேட்டு நடப்பது நல்லது என்று அறிவுரை கூறினாரே பார்க்கலாம்! அது பற்றி குடிஅரசு இதழ் எழுதியது - சோறு போட்டு உதை வாங்கிய கதை! என்று.

5.12.1956 ரெங்கூனில் உலகப் புத்தர் மாநாட்டில் சந்தித்தார்கள். புத்த மார்க்கத்தைத் தழுவுவது பற்றி அய்யாவுடன் அண்ணல் விவாதித்தார்.
வேறு மதத்திற்குச் சென்று விட்டால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும் உரிமையை இழந்து விடுவோமே... கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் நாதியற்றுப் போய் விடுவார்களே - அவர்களின் கெதி என்னாவது? என்றார் தந்தை பெரியார்.

லாகூரில் ஜாட்பெட் தோடக் மண்டலத்தார் நடத்திய மாநாட்டுக்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தயாரித்த உரையை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகள், புரட்சிச் சிந்தனைகள் இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.

அண்ணலின் அந்த உரையை, ஜாதியை ஒழிக்க வழி என்று தலைப்பிட்டு, பெரியார் சுயமரியாதை பிரச்சாரத்தின் சார்பாக எத்தனையோ பதிப்புகளை வெளியிட்டார்; எத்தனையோ இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டன. அண்ணல் அம்பேத்கர் தமிழ்நாட்டு மக்களிடையே அதிகம் அறிமுகமானதற்குக் காரணங்களில் இந்நூலும் ஒன்றாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால், காந்தியாரோஅதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. காந்தியார் உயிர்போய் விடுமே என்று ஒருவகைக் கொந்தளிப்பு!

அந்த நேரத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரு மனிதர் அம்பேத்கர் அவர்களுக்கு வித்தியாசமான தந்தி ஒன்றைக் கொடுத்தார்.
ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்பதுதான் அந்தத் தந்தி வாசகம்.

தந்தி கொடுத்த அந்த மாபெரும் மனிதர் வேறு யாராக இருக்க முடியும்- தந்தை பெரியாரைத் தவிர!

ஒரு நெருக்கடியான காலத்தில் துணிவாக வழி காட்டிய தந்தை பெரியார் அல்லவா தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான வழிகாட்டி.
1929இல் மகாத் என்கிற இடத்தில் ஒரு பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் ஒரு போராட்டத்தை தாமே தலைமை தாங்கி நடத்தினார் அம்பேத்கர் அவர்கள்.

1924இல் வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டாமை ஒழிப்பு போராட்டம் தான் மகா போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்துவதற்கு தூண்டு கோலாக அமைந்தது என்பதை அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதிய தனஞ் ஜெய்கீர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் மரணம் எப்படி ஏற்பட்டது? மாரடைப்பா, இரத்தக் கொதிப்பா, விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா?  வேறு வகையினாலா என்ற மொட்டையாகச் செய்தி அறிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக அவர் உடலைக் கொளுத்தி விட்டார்கள்.... இந்த விஞ்ஞான யுகத்தில் அப்படிக் கண்டுபிடிக்க முடியாத நோயும் இல்லையே... ஆகவே பொது விசாரணை வேண்டும் நீதி வெளி வர வேண்டும்! மர்மம் புலப்பட வேண்டும்; இந்திய சர்க்கார் ஆவன செய்வார்களா? என்று விடுதலை குமுறி தீட்டியது தலையங்கம் (10.2.1956) என்ற செய்தி எல்லாம் தமிழ் நெஞ்சப்பறையர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு வேடிக்கை.... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாடுபட்டவர் காந்தியார்தான் - பெரியாரல்ல என்று கூறும் சில அதிசய மனிதர்களும் உண்டு.

காந்தியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்ததெல்லாம் தனிக் கிணறு - தனிக் கோயில் கட்டச் சொன்னது தான்!

இது தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கு எதிரானது என்று ஆவேசம் கொண்டவர் பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களை நிரந்தரமாகத் தனிமைப்படுத்தும் ஏற்பாடு என்று காட்டமாகத் தாக்கினார்.
தனிக் கிணற்றில் தண்ணீர் குடித்து உயிர் வாழ்வதை விட பொதுக் கிணற்றில் தண்ணீர்க் குடிக்கப் போராடி சாவதுதான் மனிதனின் சுயமரியாதைக்கு அழகு என்று சுரணையோடு பேசிய சூரியன் அவர்!
6.4.1926 அன்று தந்தை பெரியார் காரைக்குடி வந்தார். தோழர்கள் இராய - சொக்கலிங்கம், பி..சுப்பிரமணியம், .ரா.கும்பலிங்கம் பிள்ளை போன்றவர்கள் தந்தை பெரியாரை மேளதாளத்துடன் அழைத்துச் சென்று, தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக வெட்டிய கிணற்றைத் திறந்து வைக்கச் சொன்னார்கள். பெரியார் பேசினாரா - ஏசினாரா? கேளுங்கள்.
 
இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையைப் பெருமையாகக் கொண்டு எனக்கு அளித்திருந்தாலும் உண்மையைச் சொல்லுகிறேன். இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கக் கொஞ்சங்கூட என் மனம் இடந்தரவில்லை. இதுபோலத் தனிக்கிணறு வெட்டுவது ஆதித் திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்கள் அல்லர் என்று எண்ணிக் கொண்டு ஒரு நிரந்தரமான வேலியும் நினைவுக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அது அர்த்தமாகும்.

பட்சிகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் குடிப்பதில்லையா? அப்படிப்பட்ட தண்ணீரை இந்த ஆதித் திராவிடர் தோழர்கள் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்?

அருமை ஆதித் திராவிடர் தோழர்களே! நீங்கள் உங்கள் ஜாதிக்கு இழிவு தேடிக் கொள்கிறீர்கள். எவரைக் கண்டாலும் இரு கை தூக்கி சாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கிறது. அதை மாற்றிட வேண்டும். சுயமரியாதையில் கவனம் இல்லாத ஜாதியாரை எவ்வளவுதான் உயர்த்தினாலும் உயராது என்று சுயமரியாதை சூடு பறக்க உணர்ச்சி உரை ஆற்றினார். அழைத்தவர்களே அதிர்ந்து போனார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் தலை எடுக்கத் தலையாகத் தேவையானது சுயமரியாதை தான் அதனைத் தந்தவர்தான் தந்தை பெரியார். அந்த வழியில் பாடுபட்டு வருவதுதான் திராவிடர் கழகம்.
தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்பதையும், பறையன் என்பதையும் அறவே வெறுத்தவர் அய்யா! இதில் திராவிடர் இயக்கத்தின் பங்கு கணிசமானது.

1920லேயே சென்னை மாநகராட்சியில் பஞ்சமர் என்ற பெயரை நீக்கி ஆதி திராவிடர் என்று பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்ற செய்தவர் நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி.நடேசனார்.
பஞ்சமர், பறையர் என்ற சொற்களை அகற்றி ஆதித் திராவிடர் என்றே இனி அழைக்க வேண்டும் என்று 1922ல் சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தது பனகல் அமைச்சரவை!
திராவிட நாட்டு ஆதித் திராவிடர்கள் அரிஜனங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுவதை மாற்றி ஆதித் திராவிடர்கள் என்ற பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று சர்க்காரையும் பொது ஜனங்களையும் கேட்டுக் கொள்கிறது.
(24.8.1940 அன்று திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி 15-வது மாநில மாநாட்டுத் தீர்மானம்)

சொல்லில்கூட சுயமரியாதைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்பதிலே திராவிடர் இயக்கம் எவ்வளவு கவலை கொண்டிருந்தது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக் காட்ட வேண்டும்.

இந்த நிலையில் விருதுநகர்த் தோழர் தமிழ் நெஞ்சன் பறையன் என்ற பெயரோடு ஜாதியையும் இந்த 1996இல்  இணைத்துப் போடுவது எந்த வகையில் சுயமரியாதை ரகத்தைச் சேர்ந்தது?

இந்து மதத்தில் இருக்கும் இந்த வருணாசிரமக் கொடுமையை - இழிவை எதிர்த்துத்தானே அண்ணல் அம்பேத்கர் அய்ந்து இலட்சம் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் புத்த மார்க்கம் தழுவினார்! (நாகபுரியில் 14.10.1956) அதில் அவர் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் 22ம் எந்தத் தன்மையன?

பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களைக் கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு புத்த மதத்தைக் கைக் கொள்ளுகிறேன் என்று கூறவில்லையா?

பெயருக்குப் பின் ஜாதிப் பட்டத்தைத் தாங்கிப் பிடிப்பதன் மூலம் பார்ப்பன வருணாசிரம - இந்துமத சித்தாந்தத்தின் கோட்டை மதிலைப் பாதுகாக்கும் இராணுவச் சிப்பாய்களாக நாம் மாறிவிட்டோம் என்று பொருளாகாதா?

இந்து மதத்தின் ஜாதியை சாவிக் கொத்துப் போல் நம்மோடு தொங்க விட்டுக் கொண்டு விளம்பரப்படுத்திக் கொண்டு திரிவதுதான் அண்ணல் அம்பேத்கர் கொள்கையை நாம் மதிக்கிறோம் - பின்பற்றுகிறோம் என்பதற்கு அடையாளமா?

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்போல புத்த மாக்கத்தைத் தழுவி இருக்க முடியாதா? அப்படிப் போயிருந்தால்  பார்ப்பனர்களுக்கு எவ்வளவுப் பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மாறாகப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கவும், பிறவியில் ஏற்ற, தாழ்வு என்னும் கொடிய வருணாசிரம நஞ்சை முறிக்கவும்தானே தந்தை பெரியார் தன் ஊன், உடல், உயிர், பொருளை எல்லாம் அர்ப்பணித்துப் பாடுபட்டார். யாருக்காக அவர்கள் உழைத்தார்களோ, அவர்களின் நன்றியை எப்பொழுதுமே தந்தை பெரியார் எதிர்பார்த்ததில்லை. தன் தொண்டுப் பணியை நன்றி பாராத தொண்டு என்று தமக்குத் தாமே வரித்துக் கொண்டு விட்டார். தந்தை பெரியார் பேசுகிறார்:

நம் நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும் என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கின்றார்கள். என்னையோ, அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து, அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும், அதன் உழைப்பின் பலனை தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமை உண்டு! என்று முழக்கமிட்டாரே தலைவர் பெரியார். (விடுதலை 8.7.1947) தம் பணி யாருக்காக என்பதை இதைவிட உள்ளத்தைத் திறந்துக் காட்டிக் கூற முடியுமா? தலைவர் பெரியார் அவர்களையே சந்தேகப்பட்டால்.... வேறு யார் ரட்சகர்?

திருச்சியை அடுத்த திருமங்கலம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் அக்ரகாரத்தில் நடந்து போகக் கூடாது என்ற இழிநிலை இருந்தது. இந்த ஊருக்குத் தந்தை பெரியார் அழைக்கப்பட்டார். அங்குத் தந்தை பெரியார் பேசினார் (4.7.1947)

இந்தவித கொடுமைகள் எங்கிருந்தாலும் திராவிடர் இயக்கத்திற்குத் தெரிவியுங்கள். இவைகளையெல்லாம் முதலில் ஓர் மாநாட்டின் மூலம் அரசியலாருக்கு எடுத்துக் கூறுவோம், ஆவன செய்ய வேண்டி. அரசு அலட்சியப்படுத்துமானால் அரசியலாரின் 144 தடைகளையும் மீறுவோம். மனித உரிமையைப் பெறுவோம். சுருங்கக் கூறுகிறேன். தாழ்த்தப்பட்டோரை யார் அடிமைப் படுத்தினாலும் அதைத் திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடும். (விடுதலை 5.4.1947)

இந்த உணர்வுக்கு என்ன பெயர்? ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இவ்வளவு உன்னதக் கோட்பாட்டை வைத்துக் கொண்டிருக்கும் இயக்கத்தின் மீது குறைகூற மனசு வரலாமா?

இந்தத் தலைவரை விட்டால் வேறு யார்? இந்த இயக்கத்தை விட்டால் வேறு யார்?

1957-இல் முதுகுளத்தூர் கலவரம்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஏற்பட்ட யுத்தம் போல ஆனதே! அந்த நேரத்தில் தந்தை பெரியார், திராவிடர் கழகம் யார் பக்கம் நின்றது? முதலமைச்சர் - பச்சைத் தமிழர் காமராசருக்குத் தைரியம் கொடுத்த தலைவர் யார்?

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? மண்டல் குழுப் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. (8.9.1993).
மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சீத்தாராம் கேசரி அவர்களைத் தொலைபேசியில் அன்றே தொடர்பு கொண்டு பாராட்டி நன்றி தெரிவித்து அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் முட்டுக்கட்டை போன்ற குறைபாடுகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர். திராவிடர் கழகப் பொன்விழாவையொட்டி சென்னையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கலந்து கொண்டார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானம் என்ன கூறுகிறது?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்து வந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்கிற உரிமையை உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தட்டிப் பறித்துள்ளது - அதே போல ஓராண்டில் காலியாகும் இடங்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை (ஊயசசசல குடிசறயசன) கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடைகள் நீக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது திராவிடர் கழகம் அல்லவா?

மண்டல் குழுப் பரிந்துரை அமலுக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை பாதிக்கப்படும் என்கிற தவறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதெல்லாம் நியாயமா?

மத்திய அரசுத்துறைகளில் பிற்படுத்தப்பபட்டவர்களுக்கு அறவே இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதற்காகத்தானே மண்டல் குழு! யார் பங்கையும் யாரும் எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அல்லவே!
தபால்காரனுக்கு 70 அல்லது 80 ரூபாய்க்கு சம்பளம், போலீஸ்காரனுக்கு 30ம், 35ம் சம்பளம்; அவனுக்கு மட்டும் ஏன் அதிகம்; இவனுக்கு மட்டும் ஏன் குறைவு என்று கேட்டால் தபால்காரன் சம்பளத்தைக் குறைத்துவிட வேண்டும் என்று அர்த்தமா? அதுபோலவேதான் ஆதிதிராவிடர்க்கு விகிதாச்சாரப்படி கிடைக்கும் சலுகைகள் பிற்படுத்தப்பட்டோருக்கும் விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டும் என்று கேட்பதும், விகிதாச்சாரப்படி சலுகை வந்தால்தான் அவனவன் ஒழுக்கமாக இருப்பான் - நாணயமாயிருக்க முடியும் என்றார் தந்தை பெரியார் (விடுதலை 20.9.1956)

தாழ்த்தப்பட்ட தோழர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட தோழர்களாக இருந்தாலும் இந்தத் தன்மையைப் புரிந்து கொண்டு, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நடந்து கொள்ள வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சைமன் ஆணையத்தின்முன் சாட்சியம் அளித்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை தாழ்த்தப்பட்ட மக்களும் அறிந்திருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்டவர்களும் நன்றி உணர்வோடு நினைவு கூர வேண்டும்.
அதேபோல பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களே யாவீர்கள்! என்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதையும் மறக்க வேண்டாம். (குடிஅரசு 11.10.1931)

தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்தாள சதிகாரர்கள், ஆதிக்கக்காரர்கள் சதிக்கிடங்குகளை வெட்டுவார்கள் - விழிப்பாக இருக்க வேண்டும் இரு  தரப்பினரும்  என்று  இந்து ஏடு (28.7.1994) இட ஒதுக்கீட்டைக் காலால் இடறி பார்ப்பனத் திமிரை தலைக்கு மேல் வழிய விடுகிறது! (உங்களுக்கோ, உங்கள் நெருங்கிய உறவினர்க்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் இடஒதுக்கீட்டில் வந்த தாழ்த்தப்பட்ட டாக்டரிடம் செல்வீர்களா? நிச்சயம் இல்லை; பார்ப்பன டாக்டரிடம் தான் செல்வீர்கள் என்று இந்துஏடு எழுதுகிறது)

இந்தியாவின் முதல் குடிமகன் என்று போற்றப்படும் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா கூறுகிறார்.  (25.9.1994) உத்தியோகங்களை வேண்டுமென்றால் பார்ப்பனர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளலாமே தவிர பார்ப்பனர்களின் மூளையை உங்களால் எடுத்துச் செல்ல முடியாது! என்று இந்நாட்டுக் குடியரசுத் தலைவர் கூறுகிறார் என்றால், இனி எந்த பார்ப்பனரை தாழ்த்தப்பட்ட வரும், பிற்படுத்தப்பட்டரும் நம்ப போகிறார்கள்? 40,000 உறுப்பினர்களைக் கொண்ட முதல்நிலை அதிகாரிகள்  மாநாட்டை டெல்லியில் கூட்டி (26.6.1990) கீழ்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. (27.9.1990)
 

மண்டல் குழு சிபாரிசுகளை மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்து வரும் இடஒதுக்கீடு உட்பட மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒட்டுமொத்தமான உறுதிபட்ட உறவுடன் அய்யுறவுகளுக்கு இடமின்றி கைகோத்து நிற்கும் நிலையில் தான் தாங்கள் பெற்றிருக்கிற உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் எருது - புலிக் கதையாகத்தான் ஆகிவிடும்.
தமிழ் நெஞ்சன் பறையன்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் தத்துவங்களை நெஞ்சில் ஏந்தி ஜாதிப் பட்டங்களைத் தூர எறிய வேண்டும். புரட்சிச் சிந்தனைகள் பூக்க வேண்டிய இடத்தில் தீவிரம் என்கிற பெயரில் பிற்போக்குப் போதைகளுக்கு அடிமையாகி விடக் கூடாது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பாரம்பரியம் தொடங்கி வீரமணி, ராம்விலாஸ் பஸ்வான், கான்சிராம் என்று திராவிடர் கழகம் அரவணைத்துத்தான் சென்று கொண்டிருக்கிறது. இதில் வித்தியாசமான பார்வை வேண்டாம் தோழர்களே.

இந்து மத வருணாசிரமக்குணம் பல்லாயிரம் ஆண்டுகாலமாக குருதிகளில் ஓடியதன் காரணமாக யார் யாருக்கு உயர்வு என்கிற சிக்கல் இருக்கலாம். இந்த நிலையில் பகுத்தறிவு புரட்சி சிந்தனைகளை சமூகத்தில் ஊடுருவச் செய்ய வேண்டியது அடிப்படைப் பணி. அந்தப் பணியை திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 25. 1.1995 முதல் 28.8.1995 முடிய 26 ஜாதி ஒழிப்பு மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்தி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் என்றால் அந்தச் சீலத்தைத் தயவுசெய்து உற்று நோக்குங்கள்!

திராவிடர் கழகம் வலிமையோடு இருக்கும் பகுதிகளில் ஜாதிச் சண்டைகள் இல்லை; சுடுகாட்டுப் பிரச்சினை எழுவதில்லையே சென்னை எம்.ஜி.ஆர் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையை அடுத்த தொழுவூர்க் குப்பத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சுகுமார் (தந்தையார் பெயர் சுப்பிரமணியன்) மறைவுற்ற நேரத்தில் (1.1.1986) கழகப் பொறுப்பாளர்கள் முன்னின்று பொதுசுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்பதை எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறோம்.

டீக்கடை தனி கிளாஸ் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் பற்றிய வேறு எந்த உரிமைப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி அவற்றிற்கு முதல் பரிகாரம் திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி அதை வலுப்படுத்துவதுதான் முதல்  வேலையாக இருக்க வேண்டும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எதிரியின் ஒற்றுமையை ஒரு கணம் நினைத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் இடைவெளி குறையும்.

திராவிடர் கழகத்திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தான் அறிமுகம்! அதைப் பெருமையாகக் கருதும் கழகம் இது!
ஒன்றுபட்டுப் போராடுவோம்! உரிமைப் பதாகையைத் தூக்கிப் பிடிப்போம்! வெற்றி நமதே! வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!

- விடுதலை ஞாயிறுமலர், 28.7.1996 மற்றும் 4.8.1996 


(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)



Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?

பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன?